கலர் ஓட்டுச்சாவடிகள் காட்சிக்கு மட்டும் 'ஓகே'

கோவை:ராம்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், பிங்க் சாவடி, நீலம் சாவடி, ஊதா சாவடி, மாடல் சாவடி, பசுமை சாவடி அமைத்திருந்தனர். பிங்க் பெண்களுக்காகவும், நீலம் இளைஞர்களுக்காகவும், ஊதா முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் அமைக்கப்பட்டது.

இந்த ஓட்டுச்சாவடிகளில் அந்தந்த வயது பிரிவுக்கு ஏற்ற ஊழியர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று கூறப்பட்டது. பிங்க் வண்ண சாவடியில் பெண் அலுவலர்களும், நீல வண்ண சாவடியில் இளம் வயது அலுவலர்களும் தேர்தல் பணியில் இருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

ஆனால் ஓட்டுச்சாவடிகளில் அப்படி பணியமர்த்தப்படவில்லை. பிங்க் சாவடியில் ஆண் அலுவலர்களும் பணியாற்றினார்கள். அங்கு வந்த பெண் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அனைத்து பிரிவு மக்களும் கலந்து நின்று தான் வாக்களித்தனர்.

தேர்தல் பணியில் இருந்த அலுவலர்கள் கூறுகையில், 'எங்களுக்கு பணிச்சுமை அதிகம். இருக்கும் எண்ணிக்கையில் பணிகளை பிரித்துக் கொண்டோம். வாக்காளர்களை வழிநடத்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் எண்ணிக்கையும் குறைவு. பணிச்சுமையால் அவர்களாலும் வாக்காளர்களை வண்ண குறியீடுகள் அடிப்படையில் வழிநடத்த முடியவில்லை' என்றனர்.

Advertisement