வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்க தடை மீனவ கிராம பஞ்சாயத்தார் அதிரடி அறிவிப்பு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்க கூடாது என, மீனவ கிராம பஞ்சாயத்து சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மாநில மற்றும் மத்திய அரசு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செய்து வருகிறது.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில், பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச், நோணாங்குப்பம் பாரடைஸ் பீச் என, பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

கடற்கரை பகுதியை பார்க்க வரும் சில சுற்றுலா பயணிகள் மது குடித்து விட்டு, பாட்டில்களை உடைத்து வீசி செல்கின்றனர். உடைந்த பாட்டில்கள் மணலில் சிதறி கிடப்பதால், அவை, சுற்றுலாப் பயணிகளின் கால்களை பதம் பார்க்கின்றன.

அதே போன்று, வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் கடற்கரை பகுதியில், அமர்ந்து மது குடித்து விட்டு, காலி பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். மணலில் உடைந்து கிடக்கும் பாட்டில்களால், கடற்கரையில் விளையாடும் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படுத்தி வருகிறது.

இனிமேல், வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட யாரும் மது குடிக்க கூடாது என, வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தினர் முடிவு செய்தனர். ஆட்டோ மூலம் இதற்கான அறிவிப்பை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement