தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி  புகாரால் நடக்கிறது விசாரணை

கோவை: கோவை வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் விருந்து பரிமாறி தி.மு.க.,வினர் உபசரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கணபதி அரசு மேல்நிலை பள்ளி, சங்கனுார் சாமிகவுண்டர் வீதி மாநகராட்சி மேல்நிலை பள்ளி, மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மேலும் பல ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிந்த தேர்தல் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவு பரிமாறப்பட்டது.

தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் இரவும், தேர்தல் நாளன்றும் காலை, மதியம், இரவு நேரத்துக்கான உணவு மற்றும் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் காபி, டீ ஆகியவை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பரிமாறப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.,வினர் செய்திருந்தனர். இதற்காக எந்த தொகையையும் அதிகாரிகளிடமோ, பணியாளர்களிடமோ பெற்றுக்கொள்ளவில்லை.

இது குறித்து விசாரணையில் இறங்கிய வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Advertisement