ஓட்டுஎண்ணும் மையத்தில் போலீசார் அவதி: தேர்தல் நடத்தும் அலுவலர் கவனிப்பாரா?

விருத்தாசலம்: அரசு கல்லுாரி ஓட்டுஎண்ணும் மையங்களில் போலீசாருக்கு அடிப்படை வசதிகள் பற்றாக்குறை குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சரிபார்ப்பு இயந்திரங்கள் (வி.வி.பாட்.,) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

இவை தனித்தனியே 'ஸ்ட்ராங் ரூமில்' அடுக்கி வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கண்காணிக்கப்படுகிறது.

கடலுார், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள் அடங்கிய 50க்கும் மேற்பட்ட போலீசார், 8 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு குடிநீர், இருக்கை வசதி, டிபன், சாப்பாடு, டீ, திண்பண்டம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தன்னிறைவாக இல்லை.

மாணவர்கள் பயன்படுத்தும் இரும்பு இருக்கைகளில் 8 மணி நேரமும் அமர்ந்து பணிபுரிய வேண்டிய அவலம் உள்ளது.

திறந்தவெளியில் பகல் முழுவதும் வெயிலில் காத்திருந்து, போலீசார் சோர்வடைந்து வருகின்றனர். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டாலும், எந்த பதிலும் சரிவர கூறவது இல்லை.

தண்ணீர், டிபன், டீ, ஸ்நாக்ஸ் போன்ற தேவைகளுக்கு போலீசார் வெளியே சென்று வருவதால், பாதுகாப்பு பணியில் குளறுபடி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், தங்களது சொந்த பணத்தில் பந்தல், பிளாஸ்டிக் சேர்களை வாடகைக்கு எடுத்து, பயன்படுத்தும் முடிவுக்கு வந்துவிட்டோம் என புலம்புகின்றனர்.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி ஓட்டுஎண்ணும் மையத்தில் போலீசாருக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement