வீடு புகுந்து வாலிபரை தாக்கிய இருவர் கைது

தி.நகர்:கொடுத்த பணத்தை திருப்பி தராததால், வீடு புகுந்து வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

தி.நகர், அபிபுல்லா தெருவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர் பிரபாத், 46. கடந்த 24ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான கோகுல்கண்ணன், ரூபன் இருவரும், பிரபாத் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். வீட்டில் இருந்த பிரபாத்தின், 18 வயது மகனை தகாத வார்த்தையால் பேசி, வெளியில் அழைத்து சென்று கட்டையால் தாக்கினர்.

தடுக்க முயன்ற பிரபாத், அவரது மனைவி, மகளையும் தகாத வார்த்தையால் பேசி, கையால் தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், இருவரும் கற்களை வீசி ரகளை செய்து, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பினர்.

காயமடைந்த குடும்பத்தினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாண்டி பஜார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, தி.நகர், மாம்பலம் நெடுஞ்சாலையை சேர்ந்த கோகுல் கண்ணன், 20, அவரது தம்பி ரூபன், 18, இவரையும், நேற்று கைது செய்தனர். கோகுல் மீது, ஏற்னகவே, போதை பொருள் கடத்தல் வழக்கு இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.

Advertisement