நகர பகுதியில் தெரு நாய்கள் அதிகரிப்பு; பொதுமக்கள் அச்சம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சரியான உணவு கிடைக்காததால், அவ்வழியாக குழந்தைகள் வாங்கி செல்லும் தின்பண்டங்களை துரத்தி பிடுங்குகிறது. இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்களை துரத்துகிறது. நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் பைக்கில் வேகமாக செல்பவர்கள், திடீரென கீழே விழுந்து காயமடைகின்றனர்.

தற்போது கோடை வெயில் வெப்பம், உணவு கிடைக்காத பசியால், பல நாய்களுக்கு வெறி பிடித்து திரிகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து கருத்தடை செய்தனர். மேலும், வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து இருந்தது. தற்போது கருத்தடை செய்யும் நடைமுறை இல்லாததால் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement