கோயில் முன்பு பந்தல் அமைக்க வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் இருந்து கிழக்கு பகுதியில் கோயில் அலுவலகம் வரை, மேற்கு பகுதியில் கொத்தால முக்கு வரை வெயில் காலம் முடியும் வரை நிழல் பந்தல் அமைக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

கோயிலில் நடந்த கும்பாபிஷேகம், மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றும் பிரச்னைக்கு பின்பு வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கோயிலுக்குள் தரிசனம் முடித்து வெளியில் வரும் பக்தர்கள் சஷ்டி மண்டபம் வழியாக அனுப்பப்படுகின்றனர்.

அவர்கள் பஸ் ஏறுவதற்கு கோயில் பஸ் ஸ்டாப் வரை நடந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகளவில் உள்ளது. இதனால் கட்டண, இலவச தரிசன பக்தர்கள் தனித்தனி வரிசைகளில் அனுப்பப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் கோயிலின் வெளிப்பகுதியில் வெயிலில் வரிசையில் நிற்கின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வயதானோர், குழந்தையுடன் வரும் பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்ல சிரப்படுகின்றனர். இதில் இருந்து அவர்களை பாதுகாக்க கோடை முடியும் வரை நிழல் பந்தல் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement