இதே நாளில் அன்று

ஏப்ரல் 27, 1945

தஞ்சை மாவட்டம், கடலங்குடியை பூர்வீகமாக கொண்ட, சாரங்கபாணி - மங்கலட்சுமி தம்பதியின் மகனாக, புதுச்சேரியின் லாஸ்பேட்டையில், 1945ல், இதே நாளில் பிறந்தவர் பிரபஞ்சன் எனும் வைத்யலிங்கம்.

இவர், புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியிலும், தஞ்சை கரந்தை கல்லுாரியில் புலவர் பட்டமும் பெற்று, ஆசிரியராக பணியாற்றினார். இவர் எழுதிய கதை, 'பரணி' இதழில் வெளியானது. 'வானம்பாடி' இதழில், பிரபஞ்சக்கவி மற்றும் பிரபஞ்சன் என்ற புனை பெயர்களில் எழுதினார்.

பின், புதுச்சேரி, 'மாலை முரசு' நாளிதழில் சேர்ந்தார். பல இதழ்களில் ஆசிரியர் பணியாற்றியபடியே, தீவிர எழுத்தாளராகவும் தொடர்ந்தார். புதுச்சேரியின் வரலாறு மற்றும் புதுச்சேரியில் பிரெஞ்சு காலனித்துவத்தை மையப்படுத்தி, நிறைய கதைகளை எழுதினார். இவரின் கதைகளில், பெண்ணியம், அடித்தட்டு மக்களின் வாழ்வியல், மனித உறவுகளின் சிக்கல்களை மிக நுட்பமாக எழுதினார்.

இவரது, 'வானம் வசப்படும்' நாவலுக்காக, 'சாஹித்ய அகாடமி, பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட விருதுகளை பெற்றார். இவரின் படைப்புகள் ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், தன், 73வது வயதில், 2018, டிசம்பர் 21ல் மறைந்தார். இவரின் உடல், அரசு மரியாதையுடன், புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement