ராமநாதபுரம் பெரியகண்மாய் நீர்வரும் வழிகள் அகற்றத்தால் தண்ணீர் வருவதில் சிக்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் - பரமக்குடி நான்குவழிச்சாலை பணிக்காக லாந்தையில் உள்ள பெரியகண்மாய் மதகுபகுதி, நீர்வரத்து வாய்க்கால்கள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊருணிகள் வறண்டுவருதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

ராமநாதபுரம் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக பெரியகண்மாய் உள்ளது. இதன்மூலம் நம்பி 3500 ஏக்கர் வரை நன்செய், புன்செய் சாகுபடி நடக்கிறது. நகரில் சிதம்பரம் பிள்ளை, நொச்சிவயல், முகவை, திரெபதியம்மன், லட்சுமிபுரம் ஊருணிகள் பெரியகண்மாய் தண்ணீர் மூலம் நிரப்படுகிறது. இதுபோல பெரியகண்மாய் நிரம்பினால், புத்தேந்தல் வழியாக சக்கரக்கோட்டை கண்மாய்க்கும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்தநிலைமையில் தற்போது பரமக்குடி டு ராமநாதபுரம் நான்குவழிச்சாலை பணியில் நீர்வரும் வாய்க்கால் அகற்றப்பட்டுள்ளன. லாந்தை அருகேயுள்ள பெரியகண்மாய் தென் கலுங்கு மதகு வாயக்கால் நீர்வழி அகற்றப்பட்டுள்ளதால் அதன்வழியாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கோடைகாலங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க பெரியகண்மாய் வாய்க்கால் வழியாக ராமநாதபுரம் நகரில் உள்ள ஊருணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கமாகும். இவ்வாண்டு அவ்வாறு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் நெடுஞ்சாலைத்துறையினர், பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் இணைந்து ஆலோசனை செய்து, கோடைகாலத்தில் பெரியகண்மாயில் இருந்து தேவையுள்ள ஊருணிகளுக்கு தண்ணீர் திறந்துவிடும் வழியில் மாற்றுவழியை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் பெரியகண்மாயில் 2.5 அடி தான் தண்ணீ்ர் இருப்புள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தினசரி 3 செ.மீ., அளவிற்கு நீர் குறைகிறது. தென்கலுங்கு மதகுபகுதியில் எங்கள் துறை சார்பில் மராமத்து பணிகள் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு பணியில் சேதமடைந்த வாய்கால்கள், கல்வெட்டுகளை புதிதாக அமைத்துதருவதாக கூறியுள்ளனர். மற்றபடி ராமநாதபுரம் நகர் ஊருணிகளுக்கு நீர் செல்லும் வழியில் ஒருஅடி தோண்டினால் தண்ணீர் வழங்க முடியும். நகராட்சி நிர்வாகம் ஊருணிகளுக்கு தண்ணீர் கேட்டால் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.------

Advertisement