உயிருடன் இருக்கும் மூவருக்கு இறப்பு சான்று வழங்கிய அதிகாரி

சத்தர்பூர்: மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உயிருடன் உள்ள மூன்று பேரை, உயிரிழந்து விட்டதாக இறப்பு சான்று வழங்கிய பஞ்சாயத்து செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரபுரா கிராம பஞ்சாயத்தில் செயலராக பணியாற்றுபவர் அமர் சிங். இவர் மீது, அதே கிராமத்தைச் சேர்ந்த ரமாபாய் ரய்க்வார், கிரிஜா விஸ்வகர்மா, கல்லு அகிர்வார் ஆகியோர் புகார் அளித்தனர்.

அதில், 'நாங்கள் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக சான்று வழங்கி, எங்களுக்கு கிடைத்த விதவை ஓய்வூதியம், தலித் நலத்திட்ட உதவித்தொகையை நிறுத்தி விட்டார்' என குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பான விசாரணைக்கு பின், பஞ்சாயத்து செயலர் அமர் சிங்கை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை நிர்வாக அதிகாரி நமசிவாய் அர்ஜரியா உத்தரவிட்டுஉள்ளார்.

இறப்பு சான்று வழங்கப்பட்ட மூன்று பேரும், சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவருக்கு எதிராக செயல்பட்டனர்.

அவர்களை பழி வாங்கும் வகையில் தலைவர் கொடுத்த அழுத்தம் காரணமாக, பஞ்சாயத்து செயலர் மூவருக்கும் போலி இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement