கோயில்களின் வழிபாட்டு முறைகளில் கோர்ட் தலையிட முடியுமா: சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சாய்தீபக்கின் அனல் பறந்த வாதம்

57

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணையில், 'கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்றும், 'கடவுளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை முடிவு செய்வது பக்தரின் புனிதமான உரிமை' என்றும் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்தது.


சாய் தீபக்

வழக்கு விசாரணையின்போது, 'கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்பதை நிரூபிக்க கிட்டதட்ட மூன்று மணி நேரம் நின்று வாதாடிய வழக்கறிஞர் சாய் தீபக்கிற்கு பாராட்டுகள் குவிகின்றன. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், ஏ.ஜி. மாசிஹ், பிரசன்னா பி. வரலே, ஆர். மகாதேவன் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு, 2018 சபரிமலை தீர்ப்பிலிருந்து எழுந்த மறுஆய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்களை விசாரித்தது.



முந்தைய தீர்ப்பு, அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய அனுமதித்திருந்தது. ஏப்ரல் 7, 2026 அன்று, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையைத் தொடங்கியது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2018 தீர்ப்பையும், மத நடைமுறைகள் குறித்த தற்போதைய நீதித்துறை அணுகுமுறையையும் நேரடியாக எதிர்த்து வாதங்களை முன்வைத்தார்.


ஏப்ரல் 8 அன்று தனது வாதங்களை முடித்த துஷார் மேத்தா, மத நம்பிக்கையின் செல்லுபடித் தன்மை அல்லது பகுத்தறிவு குறித்துத் தீர்ப்பளிக்க மதச்சார்பற்ற நீதிமன்றங்களுக்கு "புலமைச் சார்ந்த தகுதி" இல்லை என்று கூறினார். மேலும், நீதித்துறை மறுஆய்வுக்கான அடிப்படையாக "அரசியலமைப்பு ஒழுக்கம்" என்ற கோட்பாட்டை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


இந்த மனுக்களுடன் சேர்த்து, மசூதிகள் மற்றும் தர்காக்களுக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைவது, தங்களுக்கு வெளியே திருமணம் செய்துகொண்ட பார்சி பெண்களின் மத உரிமை மற்றும் தாவூதி போரா சமூகத்தில் பின்பற்றப்படும் பெண் உறுப்பு சிதைப்பு (FGM) ஆகியவற்றின் சட்டப்பூர்வ செல்லுபடித் தன்மை குறித்த விவகாரங்களும் விசாரிக்கப்பட்டன. பந்தளம் அரச குடும்பம் மற்றும் பல்வேறு பக்தர் அமைப்புகளுக்காக மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக் ஆஜரானார்.
பந்தளம் அரச குடும்பம், சேதனா பெண்கள் அமைப்பு, அகில இந்திய ஐயப்ப கோவில் அமைப்புகள், ஷிரூர் மடம், ஸ்ரீ பத்மநாபசாமி கோவில் தந்திரிகள் மற்றும் சில்கூர் பாலாஜி கோவில் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக் வாதிட்டார்.


அதிகாரம் கிடையாது


அப்போது அவர் கூறியதாவது: ஒரு மத நடைமுறை அதன் புனிதத் தன்மையால் இயல்பாகவே நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, ​​அரசு அந்த நடைமுறையை அங்கீகரிப்பதாலோ அல்லது சட்டமாக (Codified) மாற்றுவதாலோ மட்டும், அந்த நடைமுறையை ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்குத் திடீரென கிடைத்து விடாது.


"நேரடியாகச் செய்ய முடியாத ஒன்றை, மறைமுகமாகவும் செய்ய முடியாது". பண்டைய மத மரபுகளின் பகுத்தறிவுத் தன்மையை" (Rationality) சோதிப்பதற்கு நீதிமன்றங்கள் சட்டத்தை ஒரு பின்வாசல் வழியாகப் பயன்படுத்தக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், "அரசின் ஒரு அங்கத்தையோ அல்லது நிர்வாகத்தையோ நீங்கள் விமர்சிக்கும் அந்த நொடியே, நீதித்துறை மறுஆய்வு அதிகாரம் தானாகவே வந்துவிடுகிறது.


சமூக நலன் என்ற பெயரில் அரசு ஒரு மத நடைமுறையைத் தடை செய்தால், அதை யார் பரிசோதிப்பார்கள்? நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தின் மீது இவ்வளவு தாக்குதல் நடத்தத் தேவையில்லை. எல்லைகள் உள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் அதிகாரம் என்பதே இல்லை என்று சொல்வது மிகவும் கடினமானது," என்று குறிப்பிட்டார்.


சாய் தீபக் மேலும் தனது வாதத்தில், அரசியலமைப்பின் பகுதி III-ஐ முழுமையாகப் புரிந்துகொள்வது, பிரிவு 25 மற்றும் 26-க்கு இடையிலான உறவைத் தீர்க்க அவசியம் என்றவர், இந்த உரிமைகளின் தன்மை, வரம்புகள் மற்றும் அமலாக்கம் குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்பினார்.

குறிப்பாக, பிரிவு 26 என்பது மதப் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றால், மற்ற பொதுவான மத நிறுவனங்கள் தங்களின் உரிமைகளை எங்கே பெறுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் வாதிடும்போது, ஏற்கனவே உள்ள ஒரு மத நடைமுறையை அரசு சட்டமாக்குவது (Codification), அந்த நடைமுறையைத் தானாகவே நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதாக மாற்றிவிடாது. ஒரு நடைமுறையின் அசல் வடிவத்தை அரசியலமைப்பு ரீதியாக எதிர்க்க முடியாது என்றால், அரசு அதைச் சட்டத்தின் மூலம் அங்கீகரிப்பதாலேயே அதன் தன்மை மாறாது அல்லது நீதிமன்றத் தலையீட்டிற்கு அது வழிவகுக்காது.

மத நடைமுறைகள் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு மீறப்படுகின்றன என்ற அடிப்படையில் எந்தவொரு ரிட் மனுவையும் விசாரணைக்கு எடுக்கும் கேள்வி எழவில்லை. ஏனென்றால் அந்த அதிகாரங்கள் அரசுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன," என்றார்.

அப்போது நீதிபதி நாகரத்னா, "சமூகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசுக்குச் சட்டங்களை இயற்ற அதிகாரம் இருந்தால், உதாரணமாக ஆலயப் பிரவேசம்... இப்போது இங்குள்ள சர்ச்சை நுழைவை அரசு தடுத்தது என்பது அல்ல... கேரளாவின் சட்டம் மற்றும் விதிகளில் ஒரு தடையோ அல்லது பாரம்பரிய நடைமுறையோ இருப்பதாலேயே நுழைவு தொடர்பான விதியை அரசு உருவாக்கியுள்ளது," என்றார்.

ஆய்வுக்கு உட்பட்டதல்ல!




அதற்குப் பதிலளித்த சாய் தீபக், "ஏற்கனவே உள்ள ஒரு மத நடைமுறையை அரசு சட்டமாக்குவது, அந்த நடைமுறையை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதாக மாற்றாது. ஏனெனில் இது பிரிவு 25(1) மற்றும் 25(2)-ன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் உரிமைப் பயன்பாடு அல்ல. எனது தாழ்மையான சமர்ப்பிப்பு என்னவென்றால், ஒரு சட்டத்தின் வழியாக வரும் மத நடைமுறைகளுக்கு எதிரான அரசியலமைப்பு சவால்களுக்கு நீதிமன்றங்கள் தலைமை தாங்க முடியாது; அது ஆய்வுக்கு உட்பட்டது அல்ல. நேரடியாகச் செய்ய முடியாததை மறைமுகமாகவும் செய்ய முடியாது என்ற கொள்கையை நான் பயன்படுத்துகிறேன். எனவே மத நடைமுறையின் பகுத்தறிவுக்குள் உங்களால் நுழைய முடியாது.


மதப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பல்வேறு தொண்டு, கல்வி மற்றும் மத நோக்கங்களாக மாறுகின்றன. அம்பேத்கர் இந்த தத்துவத்தை எதிர்க்கவில்லை, மாறாக எந்தவொரு மதப்பிரிவும் தனது சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதில் தகுதியற்றதாக ஆக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவே அதை மாற்றியமைத்தார்.
"மதப்பிரிவு" (Religious denomination) என்ற வெளிப்பாடு ஒருபோதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது குறுகிய அர்த்தத்தில் விளக்கப்பட வேண்டிய நோக்கம் கொண்டதல்ல என்றும், அது அனைத்துக் குழுக்களுக்கும் கூட்டு மத சுதந்திரத்தை வழங்கும் பொருட்டு "மதச் சங்கம்" என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டது.

வரைவு விதிகள் பலமுறை மாற்றங்களுக்கு உள்ளானாலும், அவற்றின் அடிப்படை சாரமும் உணர்வும் மாறாமல் இருக்கிறது. இந்த வரலாற்று பரிணாமம், பின்னாளில் பிரிவு 25(2)(b) ஆக மாறிய பகுதியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.

வரலாற்றுக்கு முரண்

பிரிவு 25(2) என்பது சமூகச் சீர்திருத்தத்திற்காக அரசு தலையிட அனுமதிக்கும் ஒரு விதி. இது பிரிவு 25(1)-ல் உள்ள தனிநபர் உரிமைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. பிரிவு 26-ன் கீழ் உள்ள மதப்பிரிவு உரிமைகளைக் கட்டுப்படுத்த ஒருபோதும் உத்தேசிக்கப்படவில்லை. இதற்கு மாறான எந்தவொரு வாதமும் "வரலாற்றுக்கு முரணானது (Ahistorical) .

பிரிவு 26 என்பது பிரிவு 25-ல் உள்ள தனிநபர் உரிமைகளின் கூட்டு வெளிப்பாடாகும். அரசியலமைப்புப் பிரிவு 19(1)(c) எவ்வாறு சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை அமைக்கும் பொதுவான உரிமையை வழங்குகிறதோ, அதேபோல் பிரிவு 26 என்பது மதச் சூழலில் சங்கங்களை அமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட அரசியலமைப்பு வழிமுறையாகச் செயல்படுகிறது.

பிரிவு 26-க்குள்ளேயே பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய உள்கட்டுப்பாடுகள் உள்ளன. சமூகச் சீர்திருத்தத்திற்காக பிரிவு 25(2)-லிருந்து கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரிவினையைப் பேணுவதன் மூலம் ஒரு மதப்பிரிவின் தன்னாட்சி (Autonomy) அப்படியே இருக்கும்.

ட்ரோஜன் குதிரையா?

மதப்பிரிவுகளுக்கு இரண்டு விதமான உரிமைகள் உள்ளன: பிரிவு 25(1)-ன் கீழ் உள்ள 'நபர்' என்ற சொல்லில் நபர்களின் குழுக்களும் அடங்கும் என்பதால் அவர்களுக்குத் தனிநபர் பாணி மத சுதந்திரம் உள்ளது. அத்துடன் பிரிவு 26-ன் கீழ் நிறுவன உரிமைகளும் உள்ளன. சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்திற்காக பிரிவு 25-ன் கீழ் உள்ள உரிமைகளை அரசு ஒழுங்குபடுத்த முடியும் என்றாலும், பிரிவு 26-ல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உள் மத மேலாண்மையில் தலையிட அரசு அந்த அதிகாரத்தை ஒரு "ட்ரோஜன் குதிரையாக" பயன்படுத்த முடியாது.

அரசு இந்த எல்லையைத் தாண்டினால், நீதித்துறை மறுஆய்வு என்பது ஒரு அவசியமான தீர்வாகும். தீண்டாமை ஒழிப்பு (பிரிவு 17) ஒழுக்கக் கட்டமைப்பின் இன்றியமையாத பகுதியாகக் கருதப்பட வேண்டும். எந்தவொரு மதப்பிரிவும் தீண்டாமையைப் பின்பற்றும் உரிமையைக் கோர முடியாது. அயர்லாந்து அரசியலமைப்புடன் ஒப்பிடக் கூடாது. அதன் மத அடித்தளம் இந்திய மதச்சார்பற்ற மாதிரியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

"அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது, 'மதப்பிரிவு' என்ற கருத்து திடீரென்று ஒரு உயர்ந்த உரிமையாக மாறிவிட முடியாது. ஏனெனில் மதப்பிரிவு நிறுவனங்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட அதிகப் பாதுகாப்பு வழங்கப்பட்டால், அது பிரிவு 14-க்கு (சமத்துவம்) எதிராக அமையும். அரசியலமைப்பை அவ்வாறு விளக்க முடியாது.

"செப்டம்பர் 28, 2018 முதல் இன்று வரையிலான பயணம் என்பது அரசியலமைப்பு ஒழுக்கத்தைத் தவறாகப் பயன்படுத்திய பயணமாகும். சட்டம் என்ன சொல்ல வேண்டும் என்ற பாதையில் நாம் செல்லும்போது, நாம் கொள்கை முடிவெடுக்கும் (Policy) எல்லைக்குள் நுழைகிறோம்." என்றார்.

மூத்த வழக்கறிஞர் வி.வி. கிரி வாதிடும்போது, பிரிவு 25(1)-ன் கீழ் வழிபாட்டு உரிமை என்பது ஒரு முழுமையான உரிமை அல்ல, அது தெய்வத்தின் குறிப்பிட்ட குணாதிசயங்களுடன் ஒத்துப்போக வேண்டும். சபரிமலை ஐயப்பனின் 'நைஷ்டிக பிரம்மச்சாரி' என்ற தனித்துவமான அடையாளமே அங்கு நடைபெறும் வழிபாட்டின் மையக்கருவாகும் என்றார்.

மற்றொரு வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதிடுகையில், "இன்றியமையாத மத நடைமுறை" (Essential Religious Practices) என்ற கோட்பாடு சிதைந்துவிட்டதாகவும், நீதித்துறை ஒரு இறையியல் அமைப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்றார்.



திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 10-50 வயதுடைய பெண்களைத் தடுப்பது பாகுபாடு அல்ல. அது தெய்வத்தின் தனித்துவமான அடையாளத்தின் அடிப்படையிலான ஒரு வகைப்பாடு. சபரிமலை தவிர மற்ற 999 ஐயப்பன் கோவில்களில் இந்தத் தடை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா, இந்தச் சவாலானது ஐயப்ப பக்தர்களால் கொண்டு வரப்படவில்லை, மாறாகக் கோவிலின் நம்பிக்கை அல்லது நடைமுறைகளுடன் நேரடித் தொடர்பு இல்லாத "இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தால்" கொண்டு வரப்பட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து வழக்கு விசாரணை ஏப்.28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement