ரூ.7 கோடி அடகு நகைகளை சுருட்டிய வங்கி ஊழியர்கள் கைது

1

ஜல்னா: மஹாராஷ்டிராவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், நகைக்கடனுக்காக வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 7.31 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியது தொடர்பாக, இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மஹாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள பட்னாப்பூரில், கனரா வங்கி கிளை உள்ளது.

இங்கு, வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி இந்த வங்கியில் நடந்த காலாண்டு ஆய்வின்போது கடனுக்கு ஈடாக பெறப்பட்ட தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, 22 பைகளில் 3.79 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு பதில் போலி நகைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இது தவிர, 30 பைகளில் 3.52 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் என மொத்தம் ரூ.7.31 கோடி மாயமாகியிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, வங்கி உயர் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பட்னாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வங்கியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, பாதுகாப்பு விதியை மீறி மற்றொரு அதிகாரியை இரும்பு பெட்டக அறைக்கு செல்ல மேலாளர் அனுமதித்த து தெரியவந்தது.

இது தவிர நகை மதிப்பீட்டாளரும் போலி நகையை ஒரிஜனல் நகை என மதிப்பீடு செய்துள்ளார்.

மோசடி தொடர்பாக வங்கி மேலாளர், மற்றொரு அதிகாரி, நகை மதிப்பீட்டாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் யார் என்பதை போலீசார் வெளிப்படுத்த வில்லை. நகை மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என, தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement