தி.மு.க.,வுக்கு தாவிய காங்., நிர்வாகி; வெளிச்சத்துக்கு வந்த கூட்டணி விரிசல்?

5

துாத்துக்குடி: தி.மு.க-.,வுடன் கூட்டணியில் காங்கிரஸ் உள்ள நிலையில், அமைச்சர் முன்னிலையில், தி.மு.க.,வில் காங்., நிர்வாகி இணைந்தது, கூட்டணிக்குள் விரிசலா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

சட்டசபை தேர்தலில், கடும் இழுபறிக்கு பின்னரே, தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியானது. எனினும், காங்.,குக்கு ஒதுக்கிய 28 தொகுதிகளிலும், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தேர்தல் பணியாற்றவில்லை என கூறப்படுகிறது.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில், காங்., வேட்பாளர் அமிர்தராஜுக்கு, தி.மு.க., தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால், கடைசி நேர பண பட்டுவாடாவில் சுணக்கம் ஏற்பட்டது.

மேலும், அவரது வீட்டில், 1 கோடி ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவருக்கு நெருக்கமானவர்களே, பணம் விபரத்தை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், துாத்துக்குடி தெற்கு மாவட்ட காங்., பொதுச்செயலரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பிச்சுவிளை சுதாகர், திடீரென அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று முன்தினம் சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தார்.

தேர்தல் முடிவு வரை காத்திருக்காமல், காங்., மாவட்ட நிர்வாகி ஒருவர், தி.மு.க.,வில் ஐக்கியமானது, கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
காங்., பொறுப்பில் இருந்தாலும், தி.மு.க., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராகவே சுதாகர் இருந்தார். தொகுதி பொறுப்பாளராக இருந்தாலும், தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை. அதனால், அவரை வேட்பாளர் அமிர்தராஜ் தரப்பினர் ஒதுக்கி வைத்தனர்.

இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு தி.மு.க.,வினர், காங்., வேட்பாளருக்கு எந்த வேலையும் செய்யவில்லை. இதனால், தி.மு.க., மற்றும் காங்., தலைமைகளில் அமிர்தராஜ் புகார் அளித்தார்.

இதற்கு பதிலடியாக, காங்., நிர்வாகி சுதாகரை, தி.மு.க., பக்கம் அனிதா ராதாகிருஷ்ணன் இழுத்துள்ளார். மேலும், சில காங்., நிர்வாகிகளும் குறி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement