ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு: த.வெ.க.,வினருக்கு விஜய் அறிவுறுத்தல்

6

சென்னை: 'ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், கட்சி நிர்வாகிகள் சுழற்சி முறையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்' என, த.வெ.க., தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், தமிழகம் முழுதும் 30க்கும் அதிகமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, த.வெ.க., முக்கிய நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே நேற்று விஜய் ஆலோசனை நடத்தினார்; அவர், சில ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது, 'ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், பாதுகாப்பு பணியில் வேட்பாளர்கள் ஈடுபட வேண்டும். மாவட்ட செயலர்கள் தலைமையில், எட்டு மணி நேரத்துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில், சுழற்சி முறையில் 14 நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

'ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது, வேட்பாளர்கள், நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.

'ஓட்டு எண்ணிக்கை அன்று, த.வெ.க., நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

'ஓட்டு எண்ணிக்கையின்போது, கவுன்டர் உள்ளே, கட்சி சார்பில் எத்தனை பேர் இருப்பர் என்ற பட்டியலை, இன்றைக்குள் வேட்பாளர்கள் கொடுக்க வேண்டும்' என, விஜய் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement