மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு தகுதியில்லை; ஈரான் எம்பி

13


டெஹ்ரான்: அமெரிக்காவுடனான போர் நிறுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் தகுதி பாகிஸ்தானுக்கு கிடையாது என்று ஈரான் எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் துவங்கி நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கி, சர்வதேச அளவில் எரிசக்தி பற்றாக்குறையை ஈரான் ஏற்படுத்தியது. இதனிடையே, பாகிஸ்தான் நடத்திய பேச்சின் வாயிலாக, ஈரான் - அமெரிக்கா இடையே மே 1ம் தேதி வரை போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

போர் பதற்றம் தணிந்திருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுக்கு பாகிஸ்தான் சமீபத்தில் அழைப்பு விடுத்தது. இதற்காக பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர், நேரடியாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த டிரம்ப் அமெரிக்க குழுவினரின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தார். இருதரப்பிற்கும் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து ஈரான் எம்பி இப்ராஹிம் ரெசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; பாகிஸ்தான் ஒரு நல்ல நண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு பொருத்தமான நாடு கிடையாது. ஏனெனில், பாகிஸ்தான் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்துப்போகும் போக்குக் கொண்டது. அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிப்பதை பாகிஸ்தான் தவிர்க்கிறது. லெபனான் விவகாரம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத இடங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. ஒரு மத்தியஸ்தர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும். எப்போதும் ஒரு பக்கமே சாய்ந்து கொண்டிருக்கக் கூடாது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement