மார்ச்சில் உச்சம் தொட்டது மின்சார வாகனங்கள் புக்கிங்; மாற்றத்திற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

4

நமது சிறப்பு நிருபர்




மார்ச் மாதத்தில் மின்வாகன புக்கிங் அதிக அளவு நடந்து சாதனை படைத்து இருக்கிறது; இதற்கு பெட்ரோல், டீசல் விநியோக அச்சம் மற்றும் விலை உயர்வு ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக கருதப்படுகிறது.


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, எரிபொருட்கள் விநியோக அச்சம் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்களுக்கு மத்தியில், மார்ச் மாதத்தில் தமிழகத்தில் மின்வாகனப் பதிவுகளில் (EV registrations) ஒரு சாதனை நிகழ்ந்து இருக்கிறது.


ஆர்டிஓ அலுவலக பதிவு தரவுகள் படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 27,400 மின்வாகனங்கள் புக்கிங் செய்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், ஐந்தில் ஒரு பங்கு நான்கு சக்கர வாகனங்களாகவும், மீதமுள்ளவை இருசக்கர வாகனங்களாகவும் இருந்தன.


இதற்கு மாறாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 14,239 மின்வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. பதிவுகள் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன் விபரம் பின்வருமாறு:
ஆண்டு (மாதம்)- மின்சார வாகனங்கள் புக்கிங் எண்ணிக்கை

ஜனவரி (2026)- 18,331

பிப்ரவரி (2026)- 17,873

மார்ச் (2026)- 27,412

அதேபோல் பெட்ரோல், டீசல் வாகனங்கள் முன்பதிவு விபரம் பின்வருமாறு:

ஜனவரி (2026)- 2,40,623

பிப்ரவரி (2026)- 2,18,396

மார்ச் (2026)- 2,01,754


எரிபொருள் விநியோகம் குறித்த அச்சம் நிலவி வருவதால், ஜனவரியில் 2.40 லட்சமாக இருந்த பெட்ரோல், டீசல் வாகனங்கள் முன்பதிவு மார்ச் மாதத்தில் 2 லட்சமாகச் சரிந்தன. இது குறித்து வாகன உற்பதியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:


மின்வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு தற்போதையே சூழல் நிலையே காரணமாகும். பெரும்பாலான வாங்குபவர்கள் சென்னை மற்றும் கோவை போன்ற நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


அவர்களில் பல பெண்கள் பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற போக்குவரத்து மையங்களுக்குச் செல்லும் குறுகிய பயணங்களுக்கு பயன்படுத்தவும், குழந்தைகளைப் பள்ளியில் இறக்கிவிடவும் மின்வாகனங்களை தேர்வு செய்கின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் கோடைக்காலத்தை முன்னிட்டுப் பல மின்வாகனங்களுக்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் அதிகமான மின்வாகனங்கள் முன்பதிவிற்கு காரணமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement