வீட்டின் பூட்டை உடைத்து 9 சவரன் நகைகள் திருட்டு

பல்லாவரம்: பொழிச்சலுாரில் வீட்டின் பூட்டை உடைத்து, 9 சவரன் நகைகள் திருடியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

பம்மலை அடுத்த பொழிச்சலுார், ஞானமணி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ், 30. மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர், அனகாபுத்துாரில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை கடைக்கு விடுமுறை என்பதால், குடும்பத்துடன் குன்றத்துார் முருகன் கோவிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 9 சவரன் நகைகள், 200 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement