நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையன் கைது

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களை தாக்கி, பொருட்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையனை, மீனவர்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

நாகை மாவட்டம், செருதுார் மீனவ கிராமத்தில் இருந்து, ஏப்., 25ல் பைபர் படகுகளில், ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கில், 9 கடல் மைல் தொலைவில், பல பிரிவுகளாக பிரிந்து நேற்று அதிகாலை மீன் பிடித்தனர்.

அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட, 2 சிறிய படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூவர், பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான படகில் ஏறி, மீனவர்களை கொடூர ஆயுதங்களால் தாக்கினர்.

இதில், பழனிசாமி என்ற மீனவருக்கு கை எலும்பு முறிந்தது. அதேபோன்று, செருதுாரை சேர்ந்த கோபால், சதீஷ் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு பைபர் படகுகளில் இருந்த 7 மீனவர்களை தாக்கி, பொருட்களை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

அப்போது கடற்கொள்ளையர்களின் ஒருவனை நாகை மீனவர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மற்ற இருவர், அங்கிருந்து படகில் தப்பினர். மீனவர்கள், கீழையூர் போலீசாரிடம் சிக்கிய கடற்கொள்ளையனை ஒப்படைத்தனர்.

விசாரணையில், இலங்கை, பிலாளியை சேர்ந்த அயந்தன், 27, என்பது தெரிந்தது. மேலும், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement