பஸ் ஸ்டாண்ட் அலங்கோலம்: மாநகராட்சி 'பாராமுகம்'

திருப்பூர்:தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், தற்போது குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. இங்குள்ள வணிக வளாகக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், பஸ்கள் நிற்கும் இடத்திலேயே குவியலாகக் கொட்டப்படுகின்றன.

பயணிகள் வீசி எறியும் குப்பைகளுடன், கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளும் சேர்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஈக்களும் கொசுக்களும் மொய்த்து நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் இதைக் கண்டும் காணாமல் இருப்பது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காத்திருப்பு பகுதிகளில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்; கடைக் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. ஸ்மார்ட் சிட்டி திருப்பூரின் அடையாளமாக இருக்க வேண்டிய பஸ் நிலையம், சுகாதாரச் சீர்கேட்டின் அடையாளமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது.

Advertisement