பிரெஞ்சு பாடம் நீக்கம் அரசியல் தலைவர்கள் கண்டனம்  : காங்.,- தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

1

புதுச்சேரி:பிரெஞ்சு மொழி கல்வி நீக்கத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்.,- தி.மு.க., போராட்டத்தை அறிவித்துள்ளன.

எதிர்கட்சித்தலைவர் சிவா:

மும்மொழி பாடத்திட்டத்தின் திணிப்பினால், ஒரு வெளிநாட்டு மொழி, இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, அவர்களின் இயல்பான கற்றல் முறையையும் பாதிக்கும். 7 நாட்களில் இதை அமல்படுத்த கூறியிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மண்ணின் தனித்துவமான பிரெஞ்சு கலாசார அடையாளத்தையும் அதன் நீண்டகால மொழி வரலாற்றையும் சிதைக்கும். பிரெஞ்சு மொழியைத் தங்கள் வாழ்வியலின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ள புதுச்சேரி பூர்வகுடி மக்களின் உரிமையை இது நேரடியாகப் பறிக்கிறது. இதனை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இத்தகைய மொழித் திணிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தி.மு.க., சார்பில் கல்வி துறையை கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி:

பிரெஞ்சு கலாசாரம் உள்ள மாநிலம் புதுச்சேரி. பிரெஞ்சுகாரர்கள் ஆண்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் சென்று பலர் பணிபுரிகின்றனர். புதுச்சேரி குழந்தைகள் பிரெஞ்சு பாடத்தை படிக்கிறார்கள். பிரெஞ்சு கலாசார ஜன்னலாகவுள்ளது புதுச்சேரி. கட்டாயமப்பாடமாக்க ஹிந்தி கொண்டு வருவதை என்.ஆர்.காங்., எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஹிந்தியை புகுத்தி, பிரெஞ்சு மொழியை எடுப்பதை ஏற்கமாட்டோம். எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

முன்னாள் அமைச்சர் சிவக்குமார்:

புதுச்சேரியின் கலாசார அடையாளமான பிரெஞ்சு மொழியை கல்வி மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு பயன்படுத்த முழு உரிமை உள்ளது. புதுச்சேரியின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபோடு பிரெஞ்சு மொழி பிணைந்துள்ளது. இதனை நீக்குவது மாநிலத்தின் தனித்துவத்தை பாதிக்கும். சர்வதேச அளவில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்கும் பிரெஞ்சு மொழி கற்பிப்பதை நிறுத்துவது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கும்.

தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி:

புதுச்சேரியில் பல ஆண்டுகளாக பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் இருந்து வந்துள்ளது. அரசு பள்ளிகளில் விருப்பப்பாடமாக பிரெஞ்சுமொழி இருந்தது. மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல் பிரெஞ்சுமொழி கற்பித்தலை பாதிக்கும் வகையில் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

சி.பி.எஸ்.இ., இந்த முடிவு இளைஞர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று பணிபுரியும் கனவை முற்றிலும் தகர்க்கும். இது மாணவர்களின் மொழித் தேர்வு உரிமையை பறிப்பதுடன் புதுச்சேரியின் தனித்துவமான மரபையும், இளைஞர்களின் உலகளாவிய வாய்ப்புகளையும் சிதைக்கும் முயற்சியாகும்.

இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம்:

கட்டாய மும்மொழிக் கல்வியின் மூலம் ஒரு மாணவர் இரண்டு இந்திய மொழிகளையும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, தொடர்பு மொழியாக இருப்பதால் ஆங்கிலத்தை தவிர்க்க இயலாது. எனவே மாணவர்களின் பிரெஞ்சு கல்வி கனவு நசுக்கபடுகிறது. இந்திய மொழிகள் இரண்டை தேர்வு செய்ய வேண்டும். மத்திய அரசு மறைமுகமாக ஹிந்தியை திணிப்பதை கைவிட வேண்டும். புதுச்சேரியின் அடையாளத்தை அழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்.

Advertisement