சகோதரி இறப்புக்கு சான்று கிடைக்கவில்லை; சடலத்துடன் வங்கிக்கு வந்த ஒடிசா தொழிலாளி!

42

நமது நிருபர்



சகோதரி இறப்புக்கு உரிய ஆவணங்களை பெற முடியாத பழங்குடியின தொழிலாளி, சடலத்தை தோண்டி எடுத்து வங்கிக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளி ஜீது முண்டா. இவருக்கு வயது 50. இவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா (56) இரண்டு மாதம் முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரது வங்கி கணக்கில் ரூ.20 ஆயிரம் பணம் இருந்துள்ளது. உயிரிழந்த கல்ரா தனது கால்நடைகளை விற்றதன் மூலம் அந்த தொகையை சேமித்து வைத்திருந்தார். சகோதரி இறந்த நிலையில், அவரது கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு சகோதரர் ஜீது முண்டா வங்கியை அணுகியுள்ளார்.


இருப்பினும், வங்கி அதிகாரிகள் பணத்தை எடுப்பதற்கு இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அவரிடம் கேட்டனர். ஆனால் அவரிடம் எந்த சான்றும் இல்லை. படிப்பறிவு இல்லாத ஜீது முண்டாவுக்கு, வங்கி அதிகாரிகள் கூறும் நடைமுறைகள் எதுவும் புரியவில்லை.

'இறந்து போனதற்கு உரிய ஆவணம் வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ அவர் நேரில் வர வேண்டும்' என்று அதிகாரிகள் அவரிடம் கறாராக தெரிவித்துள்ளனர்.

வெறுப்படைந்த ஜீது முண்டா, 2 மாதங்களுக்கு முன் இறந்த தன் சகோதரியின் சடலத்தை புதைகுழியில் இருந்து தோண்டியெடுத்தார். அதை தோளில் வைத்துக் கொண்டு நேராக வந்தவர், வங்கி முன் இறக்கி வைத்து விட்டார். இதைக்கண்டு வங்கி அதிகாரிகள் அலறினர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.


பிரச்னையை புரிந்து கொண்ட போலீசார், இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க உதவுவதாக ஜீது முண்டாவுக்கு உறுதியளித்தனர். பின்னர், போலீசார் முன்னிலையில் அந்த சடலம் மீண்டும் மயானத்தில் புதைக்கப்பட்டது.

எழுதப் படிக்கத் தெரியாத ஜீது முண்டா நிருபர்களிடம் கூறியதாவது: நான் பலமுறை வங்கிக்கு சென்றேன், அங்குள்ளவர்கள், சகோதரியின் பெயரில் இருக்கும் பணத்தை எடுப்பதற்காக கணக்கு வைத்திருப்பவரை அழைத்து வருமாறு என்னிடம் கூறினார்கள்.


அவர் இறந்துவிட்டார் என்று நான் அவர்களிடம் கூறியபோதும், அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. எனவே, விரக்தியின் உச்சத்தில், அவர் இறந்ததற்கான ஆதாரமாக நானே குழி தோண்டி, சகோதரியின் சடலத்தை வெளியே எடுத்தேன், பிறகு வங்கிற்கு தூக்கி கொண்டு நடந்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


இந்தச் சம்பவம் குறித்து, கியோன்ஜார் துணை கலெக்டர் உமா சங்கர் தலாய் கூறியதாவது: அந்தப் பழங்குடியின நபருக்கு விதிமுறைகள் ஏதும் தெரியவில்லை, விரக்தியின் காரணமாக அவர் இதைச் செய்தார். அவர் நேரடி வாரிசு கிடையாது. சம்பந்தப்பட்ட வங்கி அவரிடம் ஆவணங்களைக் கேட்டது சரிதான் .


ஆனால் அவரால் அவற்றைச் சமர்ப்பிக்க முடியவில்லை. வங்கியுடன் கலந்தாலோசித்து, ரூ.20,000 உதவித்தொகை, இறப்புச் சான்றிதழ் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் ஆகியவற்றை விரைவாகப் பெறுவதற்கும் நாங்கள் வழிவகை செய்து வருகிறோம்," என்றார்.

சடலத்தை தோளில் வைத்துக்கொண்டு ஜீது முண்டா வங்கியை நோக்கி நடந்து வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. பலரும், வங்கி அதிகாரிகளின் செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.



வங்கி சொல்வது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக, ஒடிசா கிராமீன் வங்கி சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஜீது முண்டா, முதல் முறையாக வங்கிக்கு வந்தபோதே, கிளை மேலாளர் வங்கி நடைமுறைகளை விளக்கமாக தெரிவித்துள்ளார். கணக்கு வைத்துள்ளவர் இறந்து போனால் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பணத்தை வாரிசுதாரர் எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஆனால் குடிபோதையில் இருந்த அவர், அதை ஏற்கவில்லை. சற்று நேரத்தில், அடக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரியின் சடலத்தை தோண்டி எடுத்து வந்து விட்டார். இது, மிகவும் துயரமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது.
ஒருவரது இறப்புக்கு பிறகு, அவரது பணத்தை வழங்குவது தொடர்பான வங்கி நடைமுறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம். இதில், துன்புறுத்தல் எதுவும் இல்லை. உள்ளூர் அதிகாரிகளுடன் பேசி இறப்புச்சான்று வழங்கவும் வங்கி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இறப்புச்சான்று வழங்கியவுடன் அவரது பணம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement