வாழைத்தார் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செவ்வாழை, நேந்திரன், சாம்பிராணி, கதளி, பூவன் ரக வாழை சாகுபடி அதிகம் உள்ளது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கிணத்துக்கடவு மார்க்கெட்டில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், செவ்வாழை கிலோ – 45, நேந்திரன் – 30, கதளி – 32, பூவன் – 30, ரஸ்தாளி – 40, மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் – 40 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று செவ்வாழை கிலோ – 10, நேந்திரன் – 5 மற்றும் கதளி – 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. சாம்பிராணி வகை வாழைத்தார் விலை கிலோவுக்கு, 2 ரூபாய் குறைந்துள்ளது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், ‘மார்க்கெட்டில் நேற்று அனைத்து வாழைத்தார்கள் வரத்தும் குறைவாகவே இருந்தது. இதனால் செவ்வாழை, நேந்திரன், கதளி வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது,’ என்றனர்.

Advertisement