தாமஸ் கோப்பை பாட்மின்டன்: இந்தியா ஏமாற்றம்

ஹோர்சென்ஸ்: தாமஸ் கோப்பை பாட்மின்டன் லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என, சீனாவிடம் தோல்வியடைந்தது.

டென்மார்க்கில், அணிகளுக்கு இடையிலான தாமஸ், உபர் கோப்பை பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை 'ஏ' பிரிவு லீக் சுற்றில் கனடா, ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின.

ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் 19-21, 21-8, 12-21 என, சீனாவின் ஷி பெங் லீயிடம் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 13-21, 21-13, 24-26 என, சீனாவின் வெய் கெங் லியாங், சாங் வாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-13, 21-15 என, சீனாவின் ஹாங் யாங் வெங்கை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 17-21, 13-21 என, சீனாவின் ஜியாங் யு ரென், ஜி டிங் ஹீ ஜோடியிடம் தோல்வியடைந்தது.
ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் பிரனாய் 20-22, 21-19, 21-11 என, சீனாவின் குவாங் சூ லுாவை வீழ்த்தி, ஆறுதல் வெற்றி தேடித்தந்தார். முடிவில் இந்திய அணி 2-3 என தோல்வியடைந்தது.

Advertisement