ஈஸ்வரப்பா மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: கடந்த 2024 லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, ஷிவமொக்காவின் ஆதிரங்கநாதர் கோவிலில், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட ஈஸ்வரப்பா உட்பட சிலர் கூட்டம் நடத்தினர்.

இதன் அடிப்படையில், தேர்தல் பார்வையாளர்கள், துங்கா நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, ஈஸ்வரப்பா உட்பட ஒன்பது பேர் மீது, மத மையங்களை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரப்பா உட்பட ஒன்பது பேரும் மனு தாக்கல் செய்தனர்.

விசாரித்த நீதிபதி சுனில் தத் யாதவ், ''அரசியல் காரணங்களுக்காக மத வழிபாட்டு தலங்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். எனவே வழக்கை விசாரிப்பது அவசியம்,'' என கூறி, அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தார்.

Advertisement