பழனிசாமி குடும்பத்தினர் திருச்செந்துாரில் வழிபாடு

1

துாத்துக்குடி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குடும்பத்தினர், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கடந்த 28ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஸ்வரூப தரிசனம் செய்தார்; சத்ரு சம்ஹார யாகமும் நடத்தி முருகனை வழிபட்டார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்துார் கோவிலில் நேற்று முன்தினம் வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினர் நேற்று திருச்செந்துார் வந்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், அவர்கள் விஸ்வரூப தரிசனம் செய்தனர்; தொடர்ந்து மூலவர், சண்முகர் விஸ்வரூப தீபாராதனை தரிசனம் செய்தனர்.

பின்னர், பெருமாள், வள்ளி - தெய்வானை, தட்சிணாமூர்த்தி, சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

கடக ராசிக்காரர் பழனி சாமிக்காக, அவருடைய குடும்பத்தினர் முருகனை வழிபட்டால், தேர்தல் போன்ற போட்டிகளில் நல்ல முடிவு கிட்டும் என்று ஜோதிடர் அளித்த யோசனையை அடுத்தே, பழனிசாமி குடும்பத்தினர் திருச் செந்துார் சென்று முருகனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement