'அடுத்த ஆளுங்கட்சி நாமதான்!'

வேலுார் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் வேல்முருகன், சமீபத்தில் எஸ்.பி., அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

பின், அவர் கூறுகையில், 'அணைக்கட்டு தொகுதி த.வெ.க., வேட்பாளர் என்ற முறையில், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு நான் சென்று பார்த்து வருகிறேன். ஆனால், தி.மு.க.,வினர் முறையான அடையாள அட்டையின்றி அடிக்கடி உள்ளே சென்று பார்வையிடுகின்றனர்.

'அவர்கள், ஓட்டு எண்ணும் நாளில் அசம்பாவிதங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, இதை தடுக்கும் வகையில், ஓட்டு எண்ணிக்கை வளாகம், பொதுமக்கள், த.வெ.க., தொண்டர்களை பாதுகாக்கும் வகையில், கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி, எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன்' என்றார்.

அவருடன் இருந்த தொண்டர் ஒருவர், 'நம்ம போலீசார், ஆளுங்கட்சியினருக்கு தான் பாதுகாப்பு தருவாங்க...' என முணுமுணுக்க, 'அட, அடுத்த ஆளுங்கட்சி நாமதான் பா...' என, சக தொண்டர் கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

Advertisement