ஏழு வயது சிறுவன் நீச்சலில் உலகசாதனை

மதுரை: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் இஷாங்க் சிங் இந்தியா, இலங்கைக்கு இடைப்பட்ட பாக் ஜலசந்தியை நீந்தி உலக சாதனை படைத்தார்.

தமிழ்நாடு ஸ்டேட் அண்டர்வாட்டர் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது:

ஆங்கில கால்வாய், சூயஸ் கால்வாய்களில் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் சாதனை படைக்க அனுமதிக்கப்படுவர். சென்னை குற்றாலீஸ்வரன் 12 வயதில் பாக் ஜலசந்தியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். தேனி மாணவர் ஜெய் ஜஸ்வந்த் பத்து வயதில் 10 மணி நேரம் 30 நிமிடத்தில் கடந்து குற்றாலீஸ்வரன் சாதனையை முறியடித்தார்.

தற்போது ஏழு வயதிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார் ஜார்கண்ட் சிறுவன் இஷாங்க் சிங். பயிற்சியாளர்கள் அமன்குமார் ஜெய்ஸ்வால், பஜ்ரங்குமாரிடம் தொடர் பயிற்சியும் தேனி திறந்தவெளி நீச்சல் அகாடமியில் சிறப்புப் பயிற்சியும் மாணவர் பெற்றார்.

இலங்கையின் தலைமன்னார் கடற்கரையிலிருந்து ஏப். 30 அதிகாலை 4:00 மணிக்கு கடற்பயணத்தைத் தொடங்கிய இஷாங்க் சிங், கடல் நீரோட்டம், சவாலான அலைகளுக்கு இடையே நீந்தினார். 29 கி.மீ., துாரத்தை 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நீந்தி, மதியம் 1:50 மணிக்கு இந்தியாவின் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை பகுதியை அடைந்தார்.

மிகக் குறைந்த வயதில் பாக் ஜலசந்தியை கடந்த உலகின் முதல் சிறுவன் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார். யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு போரம் என்ற அமைப்பு இந்த சாதனையை அங்கீகரித்துள்ளது என்றார். கடலோர காவல்படை மண்டபம் பிரிவு கமாண்டர் இளவரசன் சிறுவனுக்கு விருது வழங்கினார்.

Advertisement