சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, குறிஞ்சி நகரில் உள்ள குறிஞ்சிநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, குறிஞ்சி நகரில் குறிஞ்சி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குறிஞ்சி நாயகி அம்மன், முருகன், விநாயகர், பஞ்சலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று காலை, அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் இருந்து, பால்குடம், தீர்த்த குடங்களை பக்தர்கள் எடுத்து வந்தனர். பால் மற்றும் தீர்த்தத்தை அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர். குறிஞ்சி நகரில் அம்மன் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Advertisement