வீர நாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் 

காட்டுமன்னார்கோவில்: வீர நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

காட்டுமன்னார்கோவிலில் மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 23ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி தினமும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்று மாலை சிறப்பு வாகனத்தில் வீதிஉலா புறப்பாடு நடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தில் கடந்த, 26 ம் தேதி கருட சேவை, 29 ம் தேதி சுவாமி திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கும் வீதி உலா நடந்தது.

சித்திரை பவுர்ணமி தினத்தில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை தாயார், சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

தொடர்ந்து மேள தாளங்கள், வானவேடிக்கையுடன் சுவாமி புறப்பாடு செய்து காலை 8:00 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.

தேரில் சிறப்பு பூஜைகள் நடந்து பக்தர்கள் 'கோவிந்தா' என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை தேர் நிலையை அடைந்தது.

இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement