ஜனநாயக கடமையில் ஏற்பட்ட வேதனை முதியவர்கள் அவதி: அதிகாரிகள் 'அசட்டை'

திருப்பூர்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷன் வழங்கிய விழிப்புணர்வு காரணமாக ஓட்டளிப்பு சதவீதம் அதிகரித்த போதும், சில ஓட்டுச்சாவடிகளில் மோசமான அடிப்படை வசதிகள் மற்றும் திட்டமிடல் குறைபாடு காரணமாக, மூத்த குடிமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் காதர் பாட்சா கூறியதாவது;அவிநாசி தொகுதிக்குட்பட்ட திருமுருகன்பூண்டி ஏ.கே.ஆர் அகாடமி பள்ளி வளாகத்தில் இருந்த ஓட்டுச்சாவடிகளில், போதிய முன்னேற்பாடு இல்லை. 70 வயதை கடந்த என் மனைவி, வழுக்கையாக அமைக்கப்பட்ட சாய்வு தளத்தில் சரிந்து விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது சக்கர நாற்காலியில் அமரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

முதியவர்களுக்கு தனி வரிசை இல்லாததால், 80 வயது கடந்த முதியவர்கள் கூட, 2 மணி நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஓட்டுச்சாவடி வளாகத்திற்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்படவில்லை.

வரிசையில் காத்திருப்பவர்கள் அமர்வதற்கு, ஒரு நாற்காலி அல்லது பெஞ்ச் கூட வழங்கப்படவில்லை.

பள்ளி மற்றும் பொது கட்டடங்களில் உள்ள சாய்வுதளங்கள் வழுக்காத வண்ணம், முறையான பிடிமானங்களுடன் இருப்பதை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் தன்னார்வலர்கள் மூலம் தடையற்ற குடிநீர் வினியோகம் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்பது போன்ற தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களை, இந்த ஓட்டுச்சாவடியில் பின்பற்றாமல் அதிகாரிகள் மெத்தனபோக்குடன் இருந்திருக்கின்றனர்; அந்த வழுக்கும் தன்மை கொண்ட சாய்வு தளத்தில் பலரும் தடுமாறி விழுந்திருக்கின்றனர்.

ஓட்டளிக்க வரும் மூத்த குடிமக்களின் கண்ணியத்தை பாதுகாக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அவல நிலை குறித்து 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில், மாநில மற்றும் மத்திய தேர்தல் கமிஷனிடம் இதுகுறித்து முறையாக புகார் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement