'நீட் தேர்வு பதட்டம் வேண்டாம்' கல்வித்துறையினர் அறிவுறுத்தல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், ஏழு தேர்வு மையங்களில், 3,603 பேர் 'நீட்' தேர்வெழுதுகின்றனர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மன அழுத்தம், பதட்டம் அல்லது மிகுந்த மனச்சுமையை உணர்ந்தால், 'டெலிமனசு' என்ற மொபைல் ஆப் அல்லது தேசிய மனநல உதவி எண், 14416 அல்லது 1800 891 4416 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க, பல அடுக்கு சரிபார்ப்பு பணி நடப்பது வழக்கம் தான். சோதனைகளுக்கு பின்பே தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். எனவே, பதட்டம் வேண்டாம்.

பயோமெட்ரிக் சரிபார்பு முக்கியமானது என்பதால், இங்கு விழித்திரை, கைரேகை சரிபார்ப்பு கட்டாயம். தொழில்நுட்ப கோளாறு அல்லது இதர காரணங்களால் சில நேரங்களில் மாணவர்களுக்கான பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, பயோமெட்ரிக் வேலை செய்ய வில்லையென்றால், மாணவர்கள் பதட்டம் அடைய தேவை இல்லை.

தொழில்நுட்ப கோளாறு அல்லது உடல் ரீதியான காரணங்களால் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முழுமையாக முடிக்க முடியாவிட்டாலும், அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இதற்காக மாணவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள்.

தேர்வெழுத உள்ளவர்கள் உடன் செல்வோர் குழப்பங்களை தவிர்க்க, தேர்வுக்கு ஒரு நாள் முன்பே (இன்றே) தேர்வு மையங்களை சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement