புதையல் ஆசையில் பெற்ற தாயை பலி கொடுக்க முயன்ற மகன் கைது

சாம்ராஜ்நகர்: புதையல் ஆசையில், பெற்ற தாயை நரபலி கொடுக்க மகன் முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தினரால் மூதாட்டி காப்பாற்றப்பட்டார்.

சாம்ராஜ்நகர் மாவட்டம், சாகடே கிராமத்தில் வசிப்பவர் மாதம்மா ஷெட்டி, 80. இவருக்கு கண் தெரியாது; காதும் கேட்காது. இவரது மகன் கொண்டய்யா மாதஷெட்டி, 45. இவருக்கு மாந்த்ரீகத்தில் நம்பிக்கை அதிகம். மந்திரவாதி ஒருவரை சந்தித்து, தனக்கு புதையல் கிடைக்கும் யோகம் உள்ளதா என்று, கேட்டார்.

அப்போது மந்திரவாதி, பவுர்ணமி நாளன்று நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய கொண்டய்யா, கண் தெரியாத, காது கேளாத தாயை பலி கொடுக்க முடிவு செய்தார். நேற்று காலை இதற்கான ஏற்பாடுகளை செய்தார்; மந்திரவாதியை வரவழைத்தார்.

தன் வீட்டிலேயே நான்கு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டினார். மாந்த்ரீகம் செய்யப்பட்ட சட்டி, மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம், கலசம் வைத்து பூஜை நடத்தினார். கொண்டய்யாவின் நடவடிக்கையில் கிராமத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் உள்ளே சென்று பார்த்தனர். வீட்டுக்குள் பள்ளம் தோண்டப்பட்டது மற்றும் மாந்த்ரீக பூஜை நடப்பதை கண்டு, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கிராமத்துக்கு வந்த சாம்ராஜ்நகர் ஊரக போலீசார், கொண்டய்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். போலீசாரை கண்ட மந்திரவாதி அங்கிருந்து தப்பிவிட்டார். கொண்டய்யாவை போலீசார் கைது செய்தனர். புதையலுக்காக தாயை பலி கொடுக்க முற்பட்டது, கிராமத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement