நீட் தேர்வு எழுதும் மாணவர்களை  சங்கடங்களுக்கு ஆட்படுத்த கூடாது கலெக்டர் சரவணன் அறிவுரை

திண்டுக்கல்: தேசிய தேர்வு முகமையின் வழிகாட்டுதல்களின்படி மாணவர்களை எவ்வித சங்கடங்களுக்கும் ஆட்படுத்தாமல் எவ்வித பிரச்னையும் ஏற்படாதவாறு சோதனை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

மாவட்டத்தில் 2026 இளங்கலை நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு மே 3ல் நடக்க உள்ளது. இத்தேர்வில் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 960 , அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, கொசவப்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராம பல்கலை என பிற 5 மையங்களில் தலா 480 பேர் என 6 தேர்வு மையங்களில் 3360 பேர் எழுத உள்ளனர். தேர்வுக்கான பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.

துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கலெக்டர் கூறியதாவது: நீட் தேர்வு மே 3ல் மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்க உள்ளது. 3360 மாணவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்த தேர்வு மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மையங்களில் தடையற்ற மின்சாரம்,குடிநீர், கழிப்பறை,தேர்வு மையங்களுக்கு அருகில் சிற்றுண்டி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

ஒருங்கிணைப்பாளர்கள் இதனை அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை எவ்வித சங்கடங்களுக்கும் ஆட்படுத்தாமல், எவ்வித பிரச்னையும் ஏற்படாத வண்ணம் சோதனை மேற்கொள்ள வேண்டும். போலீசார் பாதுகாப்பு, மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Advertisement