தேர்தல் வெற்றியை உறுதியாக நம்புவது ஏன்? நண்பர்களிடம் பகிர்ந்த பழனிசாமி

8

சென்னை : தேர்தலில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என நம்புவதற்கான காரணங்களை, தன் நண்பர்களிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பகிர்ந்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தி.மு.க., 22 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது.

இதன் வாயிலாக, 40 முதல் 44 சதவீதம் வரை கூட்டணிக்கு ஓட்டுகள் கிடைக்கும் என்பதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க., தலைமை கணக்கு போட்டுள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு 120 முதல் 160 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அதே நேரத்தில், பா.ஜ., - பா.ம.க., உள்ளிட்ட 12 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அ.தி.மு.க., தேர்தலை சந்தித்தது.

அ.தி.மு.க.,வின் தொண்டர்கள், அக்கட்சி ஆதரவு ஓட்டுகள், பா.ஜ.,வின் ஹிந்து ஆதரவு ஓட்டுகள், பா.ம.க.,வின் வன்னிய சமுதாய ஓட்டுகளுடன், தி.மு.க.,விடம் இருந்து த.வெ.க., பிரிக்கும் கிறிஸ்துவர்கள் ஓட்டுகளால், தி.மு.க., கூட்டணியை நிச்சயம் வீழ்த்தி விடலாம் என அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.

தி.மு.க., தலைமை தங்களுக்கு வெற்றி உறுதி என நம்புவது போல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும் தனக்கு வெற்றி என்பதில் உறுதியாக உள்ளார்; தன்னை சந்தித்தவர்களிடம், தன் நம்பிக்கைக்கான காரணத்தை கூறியுள்ளார்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அ.தி.மு.க., 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்தது. இந்த காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களை, மத்திய - மாநில அரசு நிதியில் செயல்படுத்தினோம். கொரோனா உச்சத்தில் இருந்தபோது, மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன; நிவாரண தொகையும் விடுவிக்கப்பட்டது. ஆனால், அதை மீறி, 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது.

அந்த தேர்தல் முடிந்ததும், அதிகாரிகள், உளவுத்துறை போலீசார், 'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி தான்' என உறுதி அளித்தனர்; ஆனால், அது நடக்கவில்லை.

அதேபோல், தற்போதும் அதிகாரிகள், உளவுத்துறை போலீசார், மீண்டும் தி.மு.க., ஆட்சி என முதல்வரிடம் கூறியுள்ளனர். அதை ஸ்டாலின் நம்புகிறார். ஆனால், அது நடக்காது. நம் ஆட்சி வரும் என பழனிசாமி தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement