சோர்வடைந்த அ.தி.மு.க., வேட்பாளர்கள்; ஊக்கப்படுத்திய பழனிசாமி

4

- நமது நிருபர் -

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளால் சோர்வடைந்துள்ள அ.தி.மு.க., வேட்பாளர்களை, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, போனில் அழைத்து பேசி உற்சாகப்படுத்தி உள்ளார்.

அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி மீதான அதிருப்தியால், சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் ஓட்டுப்பதிவானது எனவும், அதனால் அ.தி.மு.க., ஆட்சியமைக்கும் எனவும் அக்கட்சியினர் நம்பினர். ஆனால், ஓட்டுப்பதிவு முடிந்து சில நாள் கழித்து கணக்கிட்டு பார்த்ததில், வழக்கமாக அதிகரிக்கும் ஓட்டு சதவீதம் கூட, இந்த முறை அதிகரிக்கவில்லை என தெரிந்தது.

ஆனாலும், தி.மு.க., ஓட்டு வங்கியான பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஓட்டுகள் த.வெ.க., பக்கம் சென்றிருப்பதால், 'அ.தி.மு.க., வெற்றி பெறும்' என, கட்சி தலைமையில் இருந்து நம்பிக்கை ஊட்டினர். ஆனால், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளன.

சில கருத்து கணிப்புகளில், கடந்த தேர்தலை விட குறைவான இடங்களே அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலர் அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் மன உளைச்சலில் உள்ளனர். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கணிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதை அறிந்த பழனிசாமி, 'கருத்து கணிப்புகளை நம்பாதீர். இதுவரை நடந்த தேர்தல்களில், கருத்து கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தான், அ.தி.மு.க., ஆட்சி அமைத்து உள்ளோம். கருத்து கணிப்பு என்ற பெயரில் மாய பிம்பத்தை உருவாக்கி, ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய தி.மு.க., முயற்சிக்கிறது' என, அறிக்கை வெளியிட்டார்.

அத்துடன், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரையும் போனில் அழைத்து, 'நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்; தைரியமாக வேலையை பாருங்கள்' என பழனிசாமி ஊக்கம் கொடுத்து வருகிறார்.

தலைமையில் இருந்தே அழைப்பு வந்து, நம்பிக்கையான வார்த்தைகளை கூறுவதால், ஓட்டு எண்ணிக்கை பணிகளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement