கோவிலில் மொபட் திருடிய பெயிண்டர் கைது

அரியாங்குப்பம்: கோவில் வாசலில் நிருத்திருந்த மொபட் திருடிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் டோல்கேட் பகுதி சோழன் வீதியை சேர்ந்தவர் மலையாளத்தான், 69. இவர், கடந்த 21ம் தேதி அருகில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வாசல் முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்து விட்டு, திரும்பி வந்து பார்க்கும் போது மொபட் காணாமல் போயிருந்தது.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நோணாங்குப்பம் பகுதியில் அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், சஞ்சீவி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, மொபட்டில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்திற்கான எந்த ஆவணங்கள் இல்லாததால், அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியை சேர்ந்த அன்பு, 42, என்பதும், பெயிண்டர் வேலை செய்யும் இவர் அந்த பகுதிக்கு வேலைக்கு வந்த போது  கோவிலில் இருந்து மொபட்டை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிந்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement