பிரதான கட்சிகள் வழங்கிய பணத்தை வாங்கி தம் விருப்பப்படியே ஓட்டளித்த வாக்காளர்கள்

7

கடலுார்: தமிழகத்தில் பிரதான கட்சிகள் வாரி இறைத்த பணத்தை வாங்கிக் கொண்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி ஓட்டுபோட்டது தேர்தல் முடிவில் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் நடந்த தமிழக சட்டசபை தேர்தல்களில் முன்னணியில் இருந்த பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, அதற்கு கைமாறாக சத்தியத்திற்கு கட்டுப்பட்டு அந்தந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டனர்.

கடந்த கால தேர்தலை போன்றே இப்போது நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் வாக்காளர் களுக்கு பணம், பரிசு பொருட்களை வாரி இறைத்தது.

பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கியதை தேர்தல் ஆணையமும் வாய்திறக்காமல் 'கப்சிப்' என இருந்துவிட்டது.

கடந்த கால தேர்தல்களில் பட்டுவாடா செய்யப்பட்ட 'ப' வைட்டமின் வைத்தே வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தன.

ஆனால், தற்போதைய தேர்தலில் கட்சிகள் கொடுக்கும் பணத்தை முழுவதும் பட்டுவாடா செய்பவர்களை தேடி பிடித்து தங்களுக்கு ஓட்டுப்போடுவதாக உறுதி கூறி பணத்தை பெற்று வந்தனர்.

ஆனால் கைநீட்டி வாங்கியதை மறந்துவிட்டு தங்களின் விருப்பப்படியே ஓட்டுப்போட்டது தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

Advertisement