ஏலக்காய் விலை கிலோ ரூ.2,600 ஆக உயர்வு

சென்னை: மேற்காசிய போரால் ஏலக்காய் விலை, கிலோவுக்கு 2,300 ரூபாய் என குறைந்திருந்த நிலையில், உள்நாட்டு தேவையால் மீண்டும் 2,600 ரூபாயாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஏற்றுமதியாளர் எஸ்.கே.எம்.தனவந்தன் கூறியதாவது: கடந்த 2025 ஏப்ரல் முதல், சர்வதேச சந்தையில் நம் நாட்டின் ஏலக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வந்தது. ஏற்றுமதி விலையாக கிலோவுக்கு 2,600 முதல் 2,950 ரூபாய் வரையும், உள்நாட்டு விலையாக 2,400 முதல் 2,600 ரூபாய் வரையும் விலை கிடைத்து வந்தது. மேற்காசிய போர் துவங்கியபோது சராசரி விலை கிலோ 2,300 ரூபாயாக குறைந்தது.

ஏலக்காய் ஏற்றுமதிக்கு மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய சந்தையாக இருந்த நிலையில், கிடைத்த ஆர்டர்களுக்கும் இங்கிருந்து ஏலக்காய் அனுப்ப முடியவில்லை. தற்போது, போர் பதற்றம் குறைந்திருந்தாலும், சரக்கு போக்குவரத்து கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால், ஏலக்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், உள்நாட்டில் தேவை அதிகரித்ததால் இடுக்கியில் ஏலக்காயின் சராசரி விலை, கிலோ 2,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு வரத்து குறைந்ததும் ஒரு காரணம்.
வரும் நாட்களில் மழை பொழிவை பொறுத்தே ஜூலை அல்லது அக்டோபரில் ஏலக்காய் அறுவடை துவங்கும். அதுவரை ஏலக்காய் விலை உயர்ந்தே காணப்படும்.
இவ்வாறு கூறினார்.

Advertisement