சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்/ 06/05/26 புதன் இதழ்

-–––––––

அவள் விகடன், ஏப்., 21.2026. பக்: 56

இலக்குடன்

வேலை செய்தால்

சோர்வு வராது!

-––––––––

தையல் கலையை கற்று தரும், திண்டிவனத்தைச் சேர்ந்த திவ்யாஸ்ரீ:

எனக்கு கணித பாடம் நன்றாக வரும். ஆனால், பலரும் கணித பாடம் மிகவும் கஷ்டம் என்று சொல்வர். ‘உனக்கு கணக்கு எளிதாக உள்ளதால், அந்த திறமையை பயன்படுத்தி ஆசிரியராகி விடு’ என்று பலரும் கூறி இருக்கின்றனர். ஆனால், சிறு வயதிலிருந்தே தையல் கலை மீது இருந்த ஆர்வம், என்னை தையல் ஆசிரியராக மாற்றி விட்டது.

படிப்பு மட்டும் போதாது; ஏதேனும் ஒரு கைத்தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, தற்செயலாகத் தான் அக்கலையை கற்றேன். முதுகலை படித்தபோதே, தையல் தொழிலை பகுதி நேரமாக துவங்கினேன். இப்போது, அதுவே என் முழுநேர தொழிலாகவும், வாழ்க்கையாகவும் மாறிவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் ஒரு சாதாரண கல்லுாரி மாணவி தான். ஆனால், இன்று லட்சங்களில் சம்பாதிக்கும் ஒரு தொழில் முனைவோராக இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. கணக்கு பாடம் சொல்லி கொடுப்பது மட்டும் தான் ஆசிரியர் வேலையா... தையல் மற்றும் பூ வேலைப்பாடுகளை கற்றுக் கொடுப்பதும் ஆசிரியர் வேலை தானே என்ற தெளிவு எனக்கு கிடைத்தது.

இன்று தையற்கலை மட்டுமின்றி ஒப்பனை, மருதாணி போட்டு விடுவது, துணி ஓவியம், சேலை கட்டும் கலை, பட்டு நுால் வளையல் தயாரிப்பு என, பல தொழில்கள் செய்வதுடன், அது பற்றிய பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன்.

இதுவரை சமூக ஊடகங்கள் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துள்ளேன். 10 விருதுகளை பெற்றுள்ளேன். தொழில் செய்வோருக்கு சேமிப்பு மிக முக்கியம். எல்லா மாதங்களிலும் தொழில் ஒரே சீராக இருக்காது. ஒரு மாதம் ஆர்டர்கள் அதிகம் வரும்; மறு மாதம் குறையலாம்.

எனவே, வரும் வருமானத்தை சரியாக சேமித்து வைத்தால் மட்டுமே, நஷ்டத்தை தவிர்க்க முடியும். அதேபோல், ஒரு நாள் சரியாக இல்லை என்றால் வருந்தக்கூடாது. நாளை இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காக என்ன செய்யலாம் என்ற இலக்கோடு ஓடிக் கொண்டிருந்தால் சோர்வு வராது!

***



Advertisement