காரியாபட்டி பகுதியில் கந்து வட்டி அதிகரிப்பு *கண்காணிக்குமா போலீஸ்

காரியாபட்டி, மே 7-

காரியாபட்டி பகுதியில் கந்து வட்டி தொழில் படு ஜோராக நடந்து வருகிறது. இதனா் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. போலீசார் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காரியாபட்டி சுற்றியுள்ள கிராமங்களில் சிலர் அவசர தேவைகளுக்கு சில தனி நிதியாளர்களிடம் கடன் வாங்கும் நிலையில் உள்ளனர். கடன்களுக்கு ஈடாக பத்திரம், ஏ.டி.எம்., கார்டு, பாஸ்போர்ட் என வாங்கிக் கொள்வதுடன், புரோ நோட்டில் கையெழுத்து பெறுகின்றனர் . ஆத்திரத்தில் பலர் வட்டி குறித்து ஆரம்பத்தில் யோசிப்பது இல்லை. அந்த நேரத்தில் எது நடந்தாலும் பரவாயில்லை என்கிற சூழ்நிலையில், தினசரி, வாரம், மாதம் என கூடுதல் வட்டிக்கு வாங்குகின்றனர்.

குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே வட்டி கேட்டு தொந்தரவு செய்து, விடாப்பிடியாக அதிக வட்டி வசூல் செய்கின்றனர். பெரும்பாலானவர்கள் வட்டி கட்ட முடியாமல், அசலை அடைக்க முடியாமல் தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் குடும்பத் தகராறு, சொத்து இழப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கிறது. கந்து வட்டி பிரச்னைகள் தீவிரமாகி, தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன.

இதனால் போலீசார் கந்து வட்டி வழங்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் எளிய கடன் வசதிகள் வழங்க வேண்டும். போலீசார் கண்காணித்து, சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement