சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் :நிர்வாகிகளுக்கு வசந்தம் 'அட்வைஸ்'

சால்வை அணிவிப்பதற்கு பதிலாக எலுமிச்சம் பழம் மட்டும் கொடுத்தால் போதும் என தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

உளுந்தூர்பேட்டை தொகுதி உள்ளிட்ட தமிழக முழுவதும் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், தொண்டர்களை சிறப்பு கவனிப்பு செய்து உற்சாகப்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக த.வெ.க.,வினர் அதிக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று இரு பெரும் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தி.மு.க.. வேட்பாளர் வசந்தவேல் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்கு காரணமான உளுந்தூர்பேட்டை தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு முன்பாக தி.மு.க.,கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது தொகுதி எம்.எல்.ஏ., வசந்தவேல், தொகுதி பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயனும் பங்கேற்றனர்.

அப்போது தொகுதி பொறுப்பாளர், 'தேர்தலில் எதிர்பார்த்த அளவு தி.மு.க., ஆளுங்கட்சியாக உருவெடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதால் கட்சி நிர்வாகிகள் செலவினத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் பேனர் வைப்பதையோ, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,வுக்கு சால்வை போடுவதையோ தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சந்திப்பின்போது எலுமிச்சம் பழம் மட்டும் வழங்கினால் போதும்.

நிர்வாகிகள் சுப நிகழ்ச்சிகளில் அதிக பேனர் வைக்காமல் ஒரிரு பேனர் வைத்தால் போதும். தொகுதி எம்.எல்.ஏ., வசந்தவேலை உளுந்துார்பேட்டையிலேயே சந்திக்கலாம்' என்றார்.

Advertisement