ரயில்வே திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளரை நியமித்தது 'கும்டா'

சென்னை:சென்னை பெருநகரில், ரயில்வே திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக, ஒப்பந்த அடிப்படையில், ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலர் சரவணக்குமாரை, போக்குவரத்து குழுமமான கும்டா நியமித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ரயில்வே துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புறநகர் மின்சார ரயில், மேம்பால ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த திட்டங்களில், மக்களின் தேவை அடிப்படையில் புதிய வழித்தடங்கள், புதிய ரயில் நிலையங்கள் அமைப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை பெருநகரில் பிற போக்குவரத்து அமைப்புகளுடன், இத்திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு தேவை. இதற்காக ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும் என, போக்குவரத்து துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவை வலியுறுத்தின.

இதன் அடிப்படையில், சென்னை பெருநகர் ரயில்வே திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக, ஓய்வு பெற்ற ரயில்வே அலுவலர் சரவணகுமார் என்பவரை நியமித்து, போக்குவரத்து குழுமமான கும்டா உத்தரவிட்டுள்ளது.

இந்த விஷயத்தில், ரயில்வே துறையிடம் இருந்து, தகுதியான நபர்கள் குறித்த விபரங்களை கேட்டு, கும்டா பெற்று இருக்கலாம். இல்லாவிட்டால், வெளிப்படையான அறிவிப்பு வெளியிட்டு, அதன் வாயிலாக ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்து இருக்கலாம்.

ஆனால், இந்த நடைமுறைகளுக்கு மாறாக, 'ரினவுன் பவுன்டேஷன்ஸ்' என்ற தனியார் கலந்தாலோசகர் பரிந்துரை அடிப்படையில், ரயில்வே திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஒருங்கிணைப்பாளர், ஒப்பந்த அடிப்படையில் செயல்படுவார் என்றும், கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.



Advertisement