நாம் தமிழர் கட்சியினர் உட்பட 53 வேட்பாளர் ‘டிபாசிட்’ காலி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளிலும் அமைதியான முறையில் ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. போட்டியிட்ட 66 வேட்பாளர்களில் பதிவான ஓட்டுக்களில் 6 ல் ஒரு பங்கு பெறாத நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் 4 பேர் உட்பட 53 பேர் ‘டிபாசிட்’ இழந்துள்ளனர்.
பரமக்குடியில் 12 பேர், ராமநாதபுரத்தில் 13 பேர், முதுகுளத்துாரில் 20 பேர், திருவாடானையில் 21 பேர் என 4 தொகுதிகளில் அ.தி.மு.க., பா.ஜ., தி.மு.க., காங்., த.வெ.க., நாம்தழிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என 66 போட்டியிட்டனர்.
ஏப்., 23 ல் பரமக்குடி(தனி) - 1,90,014 (79.61 சதவீதம்), திருவாடானை - 2,20,448 (77.08), ராமநாதபுரம் 2,37,696 (75.37 ), முதுகுளத்துார்- 2,31,373 ( 76.62) என சராசரியாக 77.01 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (மே 4ல்) அண்ணாபல்கலை பொறியியல் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இதில் நான்கு தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களில் உள்ள தி.மு.க., த.வெ.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முதுகுளத்துாரில் அ.பு.த.ம.மு.க., வேட்பாளர் உள்ளிட்ட 13 பேர் ‘டிபாசிட்’ பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர்த்து நா.த., கட்சியின் 4 தொகுதியின் வேட்பாளர்கள், பிற கட்சியினர், சுயேச்சைகள் என 53 பேர் இந்த தேர்தலில் ‛டிபாசிட்’ தொகை ரூ.10 ஆயிரத்தை இழந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.–––