ஐந்தே நாளில் 26 மாடி கட்டடம்: வியப்பில் ஆழ்த்தியுள்ளது சீனா

8

பீஜிங்: சீனா, வெறும் 100 தொழிலாளர்களை வைத்து, ஐந்தே நாட்களில் 26 மாடி கட்டடத்தை கட்டி முடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், 26 மாடி கட்டடம் கட்ட வேண்டும் என்றால், குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், சீனாவில் உள்ள 'பிராட் குரூப் ஹோலன்' என்ற முன்னணி கட்டுமான நிறுவனம், தங்களின் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் சர்வதேச கட்டுமான பொறியாளர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

அதாவது 26 மாடிகள் கொண்ட கட்டடத்தை, 100 தொழிலாளர்களை கொண்டு, 120 மணி நேரத்தில் கட்டி முடித்து சாதனை படைத்து உள்ளது.

இந்த சாதனைக்கு சீனா பயன்படுத்தியிருப்பது 'பிரீ பேப்ரிகேட்டட்' எனப்படும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கட்டுமான முறை ஆகும். கட்டடத்திற்கு தேவையான சுவர்கள், துாண்கள், அறைகள் மற்றும் கழிப்பறை பகுதிகள் என அனைத்தையும் 'பி-கோர்' எனப்படும் பிரத்யேக 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' பயன்படுத்தி தொழிற்சாலையிலேயே முன்பே தயாரித்து விடுகின்றனர்.

இந்த பிரமாண்ட பாகங்களை, அசுர வேக ராட்சத கிரேன்கள் மூலம் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, 'நட், போல்டு'களைக் கொண்டு மிக துல்லியமாக இணைத்து விடுகின்றனர். கான்கிரீட் பயன்படுத்தப்படாமல் இந்த கட்டடம் உருவாக்கப்பட்டு உள்ளது.

'ஜிங்டு ஹோலன் பில்டிங்' என்று பெயரிடப்பட்ட இந்த கட்டடம், 1.5 லட்சம் சதுர அடி பரப்பளவில், 208 குடியிருப்பு களுடன் உள்ளது. சத்தம் மற்றும் வெப்பம் உள்ளே வராதவாறு 4 அடுக்கு கண்ணாடி ஜன்னல்கள், சோபா, கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.

இதன் உறுதித்தன்மை குறித்து கேள்வி எழுந்தபோது, இது பாரம்பரிய சிமென்ட் கட்டடங்களை விட 10 மடங்கு எடை குறைவானது என்றும், மிக மோசமான நிலநடுக்கம் வந்தால் கூட தாங்கும் சக்தி உண்டு என்றும் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement