பயங்கரவாதிகள் தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் பலி

நெட்ஜமேனா: மத்திய ஆப்ரிக்கா நாடான சாட்டில் உள்ள ராணுவ முகாமில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான சாட்டில் உள்ள ஏரிப்பகுதியில் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜிரியாவை தளமாக கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேற்கத்திய கலாசாரத்தை நீக்கி இஸ்லாமிய அரசு மற்றும் ஷரியத் சட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்தில் 2002ல் இந்த முஸ்லிம் ஆயுதக் குழு அமைக்கப்பட்டது. நைஜீரியா, கேமரூன், சாட் மற்றும் நைஜர் போன்ற அண்டை நாடுகளில் வன்முறை, கடத்தல் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துகிறது.

போகோ ஹராம் தீவிரவாத குழுவினர் நேற்று முன்தினம் சாட்டில் உள்ள பர்கா டோலோராம் தீவு பகுதியில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 26 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் சாட் ராணுவம் தெரிவித்துள்ளது.

Advertisement