உடைகிறதா அதிமுக?: எம்எல்ஏ கூட்டத்தை தள்ளிவைத்தார் இபிஎஸ்

66

நமது சிறப்பு நிருபர்



சென்னை: தவெக.,விற்கு ஆதரவளிக்கக் கோரி அதிமுக கட்சிக்குள் சீனியர் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், அக்கட்சி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று (மே 6) நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை தள்ளி வைத்துள்ளார் பழனிசாமி.

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வென்றது. திமுக கூட்டணி 73 இடங்களும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தவெக.,விற்கு பெரும்பான்மை இடங்கள் இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகள் அல்லது அதிமுக கூட்டணி கட்சிகள் அல்லது அதிமுக.,வின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது தவெக.

அதிமுக கைவசம் உள்ள 47 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு மட்டும் இருந்தாலே விஜயின் தவெக., ஆட்சி அமைக்கவோ, 5 ஆண்டுகள் நீடிக்கவோ எந்த பிரச்னையும் எழாது.

இந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிந்த மே 4ம் தேதியே பெரும்பான்மை கிடைக்காததால் அதிமுக.,வை உடைக்க செங்கோட்டையன் தலைமையில் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக.,விற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் தரப்பில் தவெக.,விற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

அதில் முக்கியமானது தவெக.,வின் அமைச்சரவையில் செங்கோட்டையன் இடம்பெற கூடாது என நிபந்தனை விதித்தாராம் பழனிசாமி. அதற்கும் ஓகே சொன்ன தவெக, செங்கோட்டையனுக்கு சபாநாயகர் பதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. அதனை ஏற்க மறுத்த பழனிசாமி, செங்கோட்டையன் வெறும் எம்எல்ஏ.,வாக மட்டுமே தொடர வேண்டும், சபாநாயகர், அமைச்சர் என எந்த பதவியையும் அளிக்க கூடாது என்றாராம்.

அதற்கு தவெக தரப்பில், ''நீங்கள் சொல்வதை கேட்க நாங்கள் பா.ஜ., அல்ல, இது தவெக, நாங்கள் இப்படித்தான் முடிவெடுத்துள்ளோம்'' என ஆணித்தரமாக கூறியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பழனிசாமி, தவெக.,விற்கு ஆதரவளிப்பதில் இருந்து பின்வாங்கியுள்ளார். ஆனால், அதிமுக சீனியர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர், 'செங்கோட்டையனுக்கு பதவியளிப்பது அவர்களின் கட்சி பிரச்னை, நாம் தலையிட தேவையில்லை. ஆதரவளிப்போம்' என்றனர். இதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை.

இதன் காரணமாக செங்கோட்டையன் தரப்பு முன்னரே திட்டம் தீட்டியதுபோல, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரின் தலைமையில் அதிமுக.,வை இரண்டாக உடைத்து சில எம்எல்ஏ.,க்களுடன் தவெக.,விற்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாகவே, இன்று நடைபெற இருந்த அதிமுக எம்எல்ஏ கூட்டத்தையும் தள்ளிவைத்துள்ளார் பழனிசாமி.

Advertisement