கட்சியை வளர்க்க பாருங்க: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சீறிய ராகுல்

18

- நமது நிருபர் -

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'இனியாவது கட்சியை வளர்க்க பாருங்க' என, கோபாவேசமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக தமிழகம் வந்த ராகுல், சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

அங்கிருந்து, விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற ராகுல், பின்னர், தமிழக காங்., தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார்.

அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பினார். ஹோட்டலில், காங்., முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அனைவரின் கருத்தை கேட்டறிந்த ராகுல், 'இனியாவது, தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாருங்க' என கோபமாக கூறிவிட்டு, டில்லி புறப்பட்டு சென்றார். இது கட்சி நிர்வாகிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, சத்தியமூர்த்தி பவனில், ராகுலுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாதது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழக காங்., முன்னாள் நிர்வாகி மயிலை அசோக்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'ராகுலை வரவேற்பதுகூட, ஒழுங்காக நடக்கவில்லை. இந்த குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'வெளி ஆட்கள் உள்ளே புகுந்து நெருக்கியதால், ராகுல் நிலை தடுமாறி உள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாததால், உடனே புறப்பட்டு விட்டார். பாதுகாப்பு குறைபாடு குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement