அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

ப.வேலுார் :தமிழக சட்டசபை தேர்தலில், ப.வேலுார் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார். இவர், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தீவிர ஆதரவாளர். தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,க்களில் ஒரு அணியினர், த.வெ.க.,விற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளருமான தங்கமணியும் ஆதரவு தெரிவித்தார்.


இந்நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து தங்கமணி விடுவிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்த நிலையில், தங்கமணியின் தீவிர ஆதரவாளரான கபிலர்மலை தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் அ.தி.மு.க., ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர் தன் ஆதரவை, த.வெ.க விற்கு தெரிவித்துள்ளார். இதனால் ப.வேலுார் தொகுதி, அ.தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை, சென்னையில் இருந்து பாண்டமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு சேகர் எம்.எல்.ஏ., சென்றார். இதையடுத்து, அ.தி.மு.க.,வினரால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாண்டமங்கலத்தில் உள்ள எம்.எல்.ஏ., சேகர் வீட்டுக்கு, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில், இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement