அதிமுகவை இழுத்து பா.ஜ.,வுக்கு 'செக்'; அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி

8

நமது சிறப்பு நிருபர்



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்., 12, பா.ஜ., 4, அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடந்த முறை போல் 2 அமைச்சர், சபாநாயகர் ஆகிய 3 பதவிகள் கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு, பா.ஜ., கடும் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதில் ஒரு அமைச்சர் பதவி தனக்கு வேண்டும் என ல.ஜ.க., சார்லஸ் மார்ட்டன், தன் பங்கிற்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, பழைய முறைப்படி பதவிகள் வழங்கப்படும் என, பா.ஜ.,விற்கு முன்பே ரங்கசாமி தெளிவாக கூறியிருந்தார். ஆனால் பா.ஜ.,வின் போதாத காலமோ, என்னவோ 10 தொகுதியில் நின்று 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தனது கையிருப்பை விடமுடியாத பா.ஜ., தலைமை கடந்த முறையில் போல் 3 பதவிகளையும் வாங்க படாதபாடுபட்டு வருகிறது. இதனால் முதல்வர் ரங்கசாமி எரிச்சலடைந்தார்.

இந்த நிலையில், தான் மட்டும் முதல்வராக பதவி ஏற்க இருந்த நிலையில், அதேநாளில் தாங்களும் அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என அடம் பிடித்து, முதல்வருக்கு தலைவலி கொடுத்தது பா.ஜ.,.


இதனால் கடும் உஷ்ணமான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.,வை சுற்றலில் விட கடந்த மே 9ம் தேதி தன்னுடன் 2 அமைச்சர்கள் பதவியேற்பிற்கான பட்டியலில் நமச்சிவாயம், அன்பழகன் பெயரை இணைத்து கவர்னர் கைலாஷ்நாதனிடம் வழங்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பா.ஜ., தலைமை, அன்பழகனுக்கு வழங்கப்படும் அமைச்சர் பதவி யார் 'கோட்டா'வில் என அலறியடித்து கேட்டது. அதற்கு, முதல்வரோ படு கூலாக உங்கள் 'கோட்டா'வில் தான் எனக் கூறி திகிலடைய செய்தார்.
அதிர்ச்சியடைந்த பா.ஜ., தலைமை, முதல்வரை சமாதானம் செய்து, அன்பழகன் பெயரை மாற்ற வைத்து மல்லாடி கிருஷ்ணராவ் பெயரை சேர்த்த பின்னரே நிம்மதி அடைந்தது. பா.ஜ.,வை தலைசுற்ற வைத்த இந்த சம்பவத்தால் டில்லி மேலிடம், முதல்வரிடம் மோதல் போக்கை கையாள வேண்டாம் என மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Advertisement