சிங்கப்பூரில் அனுமதியின்றி பழம் பறித்தால் ரூ.3.5 லட்சம் அபராதம்: கீழே கிடப்பதை எடுத்தாலும் சிக்கல்!

22

நமது சிறப்பு நிருபர்




சிங்கப்பூரில் பொது இடங்களில் வளர்ந்திருக்கும் மரங்களில் இருந்து பழங்களை பறித்தாலோ, கீழே விழுந்த பழத்தை அனுமதியின்றி எடுத்தாலோ, 5,000 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம்) அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் மக்கள் பயன்படுத்தும் பொதுஇடங்களில் மா உள்ளிட்ட பழ மரங்கள் வைத்து பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் காய்க்கும் காய்கள், பழங்களை பொதுமக்கள் யாரும் பறிக்கக் கூடாது என்பது சட்டம். பழம் தானாக கீழே விழுந்தாலும் பொதுமக்கள் அவற்றை எடுக்கக் கூடாது. எடுத்தால் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர்வாசியான பிரியங்கா சின்ஹா சமூக வலைதளத்தில், ''பொது இடங்களில் உள்ள பழ மரங்கள் அரசின் சொத்தாக கருதப்படுகின்றன. எனவே சாலை உள்ளிட்ட பொது இடத்தில் உள்ள மரத்தில் இருந்து கீழே விழுந்த மாம்பழத்தை எடுத்தால் அபராதம் விதிக்கப்படலாம். எனவே சிங்கப்பூரில் வசிப்பவர்கள் உரிய அனுமதியின்றி பழங்களைப் பறிக்கவோ அல்லது சேகரிக்கவோ முடியாது'' என பதிவிட்டு இருந்தார்.

நகைச்சுவை கருத்துக்கள்




இந்த பதிவு சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பியது. இணையவாசிகள் இதைக் குறித்து நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்தியாவில் சாலையோரங்களில் உள்ள பழ மரங்களை உள்ளூர் மக்கள் பெரும்பாலும் தாராளமாக அணுகிப் பயன்படுத்தும் சூழலோடு, இந்தச் சிங்கப்பூர் நிலையை பல இணையப் பயனர்கள் ஒப்பிட்டுப் பேசினர்.

இத்தகைய விதியை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது சிங்கப்பூரின் கடும் கட்டுப்பாடுகளை பிரதிபலிப்பதாகக் கருத்து தெரிவித்தனர். ஒரு பயனர் சற்று குறும்புத்தனமாக, "எங்கள் செல்லப்பிராணிகள் பழங்களைச் சேகரிக்க உதவினால் என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மற்றொரு பயனர் பதிலளிக்கையில், "சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளின் செயலுக்கு அவற்றின் உரிமையாளர் தான் பொறுப்பு. உங்கள் செல்லப்பிராணி ஒரு பொது மரத்திலிருந்து பழத்தைச் சேகரித்தால், அந்தச் செயலைச் செய்ய நீங்கள் தூண்டியதாகவோ அல்லது அனுமதித்ததாகவோ சட்டரீதியாகக் கருதப்படுவீர்கள்," என்று குறிப்பிட்டார்.



இது குறித்து சிங்கப்பூரின் தேசிய மேம்பாட்டு அமைச்சகம் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: அரசு நிலத்தில் அமைந்துள்ள மரங்கள், அவற்றின் பழங்கள் உட்பட அனைத்தும் அரசிற்கே சொந்தமானவை. அரசு நிலத்தில் உள்ள பெரும்பாலான மரங்களை தேசிய பூங்காக்கள் வாரியம் நிர்வகிக்கிறது.
அரசு நிலத்தில் உள்ள மரங்களிலிருந்து பழங்களைப் பறிக்கவோ அல்லது கீழே விழுந்த பழங்களைச் சேகரிக்கவோ விரும்பும் பொதுமக்கள், அதற்கான அனுமதியைப் பெற தேசிய பூங்காக்கள் வாரியத்தை அணுக வேண்டும்.

பொதுப் பூங்கா ஒன்றில் அனுமதியின்றி பழங்களைப் பறிப்பவர்கள் அல்லது சேகரிப்பவர்களுக்கு சட்டப்படி 5,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம். இயற்கை காப்பகங்கள் அல்லது தேசியப் பூங்காக்களில் இச்செயலைச் செய்பவர்களுக்கு 50,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்; அத்துடன், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement